Tuesday 11 December 2012

மஹாகவி சுப்பிரமணிய பாரதியார் வாழ்க்கை வரலாறு!! ஒரு சிறப்பு பார்வை


சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921). இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி, ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர்.

தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ.வே.சு. ஐயர், சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர்.

தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் எட்டயபுரம் சமஸ்தானத்தால் வழங்கப்பட்டது.

வாழ்க்கைக் குறிப்பு
1882-ம் ஆண்டு எட்டயபுரத்தில் பிறந்த பாரதி தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்படும் நஷ்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டையபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொள்கின்றார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் செல்கின்றார். 1898 முதல் 1902 வரை காசியில் தங்கி இருந்தார். பின்னர் எட்டையபுரத்தின் மன்னனால் அழைத்து வரப்பட்டு காசி அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார். இவ்வாறு ஏழு வருடங்கள் பாட்டெழுதாமல் இருந்த பாரதி 1904 ஆம் ஆண்டு மதுரையில் அவர் எழுதும் பாடல் 'விவேகபானு' இதழில் வெளியாகின்றது. வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் மற்றும் வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.

இலக்கியப் பணி
கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,

வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி
 - பாரதி.

தம் தாய்மொழியாம் தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" என கவிபுணைந்த கவிஞாயிறு. சம்ஸ்க்ருதம், வங்காளம், ஹிந்தி, ப்ரெஞ்ச் மற்றும் ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளை தமிழ்மொழியாக்கம் செய்தவர். பழந்தமிழ்க் காவியங்களின்மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்ட மாமேதை. தேசிய கவி என்ற முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவின்றதினாலும், இவர் உலகின் தலைசிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர். தமிழின் தன்னிகரற்ற கவியேறு.

* குயில் பாட்டு
* கண்ணன் பாட்டு - இந்துக் கடவுளான கண்ணன் மீது பாடிய பாடல்களின் தொகுப்பாகும்.
* பாஞ்சாலி சபதம்

ஆகியன அவர் படைப்புகளில் சில.

பத்திரிகைப் பணியும் விடுதலைப் போராட்டமும்
பாரதியார் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக நவம்பர் 1904 முதல் ஆகத்து 1906 வரை பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகத்து 1920 முதல் செப்டம்பர் 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றியே மறைந்தார். சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் (ஆக. 1905-ஆக. 1906 ), இந்தியா என்ற வார இதழில் (மே 1905-மார்.1906/செப்.1906, புதுச்சேரி: 10.19.1908- 17.05.1910), சூரியோதயம்(1910), கர்மயோகி (திசம்பர் 1909-1910), தர்மம் (பிப்.1910),என்ற இத்ழ்களிலும் பாலபாரதா ஆர் யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.

தேசிய கவி
விடுதலை போராட்ட காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளை படைத்து மக்களை ஒருங்கினைத்த காரணத்தால் பாரதி தேசிய கவியாக போற்றப்படுகிறார். மண்ணும் இமயமலை எங்கள் மலையே... மாநிலமீதிதுபோல் பிறிதிலையே... இன்னறு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே... இங்கிதன் மாண்பிற்கெதிர் எது வேறே என்று எழுதியவர்.

தன்னுடைய தாய்நாட்டை நினைந்து பெருமைகொண்டதோடு மட்டுமன்றி அதன் எதிர்காலம் எவ்வாறிருக்கவேண்டும் என்ற பார்வையும் பெற்றவர். "வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்" என்றவர், பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்றார். வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்யும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுதலைக்கு முன்பே கனவுகண்டவர்.

ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் - என்று விடுதலைக்கு முன்பாகவே பாடிக்களித்த பாரதி, தேச விடுதலைக்கு முன்பாகவே உயிர்நீத்தவர்.

புதுக்கவிதைப் புலவன்
பாட்டுக்கொரு புலவன் பாரதி பாடல்களின் இலக்கணக் கட்டுக்களைத் தகர்த்தெறிந்தவன். இவனுக்கு முன்பாக கவிபுனைந்த கவிஞர்கள் தொல்காப்பிய இலக்கணம் சிறிதும் வழுவாமல், பொருள்கொள், யாப்பு, அணி என இலக்கணத்தில் கட்டுண்டு கற்றோர் மட்டும் கற்றறியும் கவிதைகளையே புணைந்தனர். இலக்கணச் சட்டங்களைத் தகர்த்தெறிந்த பாரதி, புதுக் கவிதை என புகழப்படும், பாமரரும் கேட்டுணரும் வசன கவிதையை தமிழுக்குத் தந்தவன்.

பெண்ணுரிமைப் போராளி
தமிழகத்தில் முதலில் பெண்ணுரிமையைப் பேசியது பாரதியாகத்தான் இருக்கமுடியும். பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத் திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே என பெண்ணுரிமையை ஏத்தினான். போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகான் என்ற பாரதி பெண்மை வாழ்கவென கூத்திடுவோமடா என்றான். பெண்களின் கல்வியறிவுகானவும் சட்டங்களை செய்திடவும் கனவுகண்ட பாரதி, சாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வச் சாதிபடைக்கவும் பெண்கள் தகுதிபடைத்தவர்கள் என்று கண்டான்.

பாஞ்சாலி சபதம்
இந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்புதான் பாஞ்சாலி சபதம். அழகிய இலக்கிய நயத்தையும், மிக அழகான கவிநயத்தையும் கொண்ட தமிழின் அழியாக் காவியமாக பாரதியின் பாஞ்சாலி சபதம் விளங்குகிறது.



பல நிறைவேறாத கனவுகளுக்குச் சொந்தக்காரனான ஒரு மாபெரும் தமிழனுக்கு இன்று பிறந்த நாள் நினைவு. மஹாகவி சுப்பிரமணிய பாரதியார். எட்டயபுரத்துக் கவிஞன். சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்பது உட்பட தமிழுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் அவன் கண்ட கனவுகள் பலவும் நிராதரவாகக் கிடக்கின்றன. முகநூல், டுவிட்டர் மற்றும் இன்னபிற தளங்களிலும் எல்லோரும் பாரதி புகழ் பாடுகின்றனர். எல்லாம் இன்றிரவோடு சரி. நாளைய ரஜினிகாந்தின் பிறந்தநாள் கொண்டாட்டங்களோடு எல்லாம் மறந்துபோய்விடும். வாருங்கள், ஒரு பாரதி பாடலைப் பார்த்துவிட்டுப் பேசலாம்.



இன்று மட்டுமில்லை, என்றுமே போற்றப்பட வேண்டிய கவிஞன் பாரதி. மண் விடுதலைக்காகவும் பெண் விடுதலைக்காகவும் பாடுபட்டவன். பாரதியைப் பற்றி இன்றளவிலும் ஏராளமான ஆய்வுகள், விமர்சனங்கள் மற்றும் தரவு ரீதியான ஆய்வுகள் வெளிவந்துள்ளன. இனி பாரதியைப் பற்றி ஆய்வு செய்ய வேண்டுமானால் புதியதொரு கோணத்தை கண்டுபிடித்தாக வேண்டும். ஆயினும் என்ன பயன்? பலருக்கு கலாநிதிப் பட்டங்களையும் இன்னபிற கௌரவங்களையும் பேரையும் புகழையும் வாங்கிக் கொடுத்துள்ளதே தவிர சமூகத்தின் பாமர மக்களிடையேயோ அல்லது உயர் வர்க்கத்தினரிடையேயோ எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. இன்னும் ஒரு பாரதி பாடல் - நிற்பதுவே நடப்பதுவே......



 
ஏட்டில் மட்டும் வைத்துப் பாதுகாப்பதற்கு எழுதிவைக்கவில்லை நம் எட்டயபுரத்து முண்டாசுக் கவி. எடுத்துப் படித்து அதன்வழி மக்கள் பயனுற வேண்டும் என்றே எழுச்சி கொண்டு எழுதினான். இன்றைய நாளில் பாரதி எழுதிய கவிதைகளில் அது சிறந்தது, இது சிறந்தது என்று சிலாகித்துச் செல்ல நான் விரும்பவில்லை. பாரதிக்கும் நமக்கும் தூரம் அதிகம். அவன் எழுச்சி மிக்கவன். நாம் இன்னமும் எழுச்சியின் சுடரையே தரிசிக்காதவர்கள். ஒன்று மட்டுமே சொல்லலாம். உண்மையாய் உள்ளம் ஒன்றி உச்சரிக்க இயன்றவர்கள் மட்டும் பாரதி பற்றியும் மற்றைய உன்னதமான தமிழ்க் கவிகள் பற்றியும் பேசுங்கள். ஏனையோருக்கு இருக்கவே இருக்கிறார்கள் தெருவுக்கொரு போலிக் கவிகள். அவர்கள் வால் பிடித்துத் திரியுங்கள். சின்னஞ் சிறு கிளியே...... - பாரதி பாடல் 



 
முகநூலில் ஒருவர் இப்படிக் கூறியிருந்தார். 'உன்னைப் போல் தலைவர்களின் பிறந்தநாட்களைக் கொண்டாடும் வழக்கம் எம் மத்தியில் இருப்பதால் தான் இன்றைக்கு உன்னையும் நினைத்துப் பார்க்க முடிகிறது.' சமூகம் என்ன நிலையில் இருக்கிறது என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. பாரதியின் கனவுகள் பலிதமாக வேண்டும் என்று பிரார்த்திப்பதைத் தவிர இந்நாளில் அவனுக்காய் செய்யக் கூடியது ஒன்றுமில்லை. ஹாப்பி பர்த்டே சொல்வதற்கு உங்கள் வீட்டு நாய்க்குட்டியல்ல அவன். தயவு செய்து தமிழனின் பெயரைக் கெடுக்காதீர்கள். நல்ல வேளை பாரதி இன்று உயிரோடு இல்லை. இருந்திருந்தால் அவரது முகநூல் பக்கத்திற்கு வாழ்த்தட்டை அனுப்பியிருப்பார்கள். பாரதி பற்றிய தொகுப்புடன் ஒரு பாடல் - காணி நிலம் வேண்டும்.........



 
ஏட்டளவில் இருக்கும் பாரதியின் கனவுகளெல்லாம் நிஜமாக வேண்டும். அதுவரை பாரதியின் பிறந்தநாளையும் இறந்தநாளையும் நினைவு கூர்வதில் அர்த்தம் ஏதும் இருக்கப் போவதில்லை. சாதிக் கொடுமை, பெண் விடுதலை, தமிழின் அருமை என்று அவன் பாடியதெல்லாம் தன் சமூகத்தின் உயர்வுக்காகவே அன்றி தன் புகழ் கருதியல்ல. தன்னலம் மறப்போம். அவன் கனவுகள் மனதினில் சுமப்போம். நாளைய விடியல் தமிழர்களுக்கான உண்மையான விடியலாய் அமையட்டும். கேளடா மானிடா.... - பாரதி பாடல் 



 

அன்புடன்,
பாரதியின் கனவுகளுடன்,
மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment