Tuesday 4 December 2012

வீடுகளுக்கான காற்றாலை மின் உற்பத்தி!! ஒரு சிறப்பு பார்வை....




சென்னையில் நடக்கும், காற்றாலை மின் உற்பத்தி - 2012 சர்வதேச கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில், பங்கேற்ற மரபுசாரா எரிசக்தி துறை அமைச்சர் பரூக் அப்துல்லா பேசியதாவது: காற்றாலை மின் உற்பத்தியாளர்களிடம் செய்த, மின் கொள்முதலுக்கான தொகையை, தமிழகம் உள்பட, சில மாநிலங்கள், பல மாதங்களாக வழங்கவில்லை. உற்பத்தியாளர்களிடமிருந்து, கொள்முதல் செய்த மின்சாரத்திற்கு, உரிய நேரத்தில் பணம் வழங்கா விட்டால், காற்றாலை மின் உற்பத்தி பாதிக்கும். எனவே, காற்றாலை மின் உற்பத்தியாளர்களுக்கு அளிக்க வேண்டிய தொகையை, மத்திய அரசு வழங்கி விட்டு, மாநில அரசுகளுக்கு அளிக்கும் நிதியிலிருந்து, அத்தொகையை பிடித்தம் செய்து கொள்ளும். 

மத்திய அரசின், இந்த திட்டத்தை, இந்திய காற்றாலை உற்பத்தியாளர்கள் சங்கம் வரவேற்றுள்ளது. அதன்தலைவர், கஸ்தூரி ரங்கையன் கூறியதாவது: மின் உற்பத்திக்கான பணத்தை, உரிய காலத்தில் வழங்கா விட்டால், தொடர்ந்து உற்பத்தி செய்வது கடினம். தமிழகம் உட்பட பல மாநிலங்கள், தனியார் காற்றாலை உற்பத்தியாளர்களிடமிருந்து, கொள்முதல் செய்த மின்சாரத்திற்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி உள்ளது.


காற்றாலை மின் உற்பத்திக்கான பணத்தை, மத்திய அரசே நேரடியாக வழங்கும் என்ற அறிவிப்பு வரவேற்புக்குரியது என, காற்றாலை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மேலும், இந்நடைமுறையை, விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, வலியுறுத்தி உள்ளது. 



தமிழகத்தில் மட்டும் கடந்த ஆறு மாதத்தில், 6,900 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்து வழங்கி உள்ளோம். வாரியம், கொள்முதல் செய்த மின்சாரத்திற்கு, இதுவரை பணம் வழங்கவில்லை. ஆறு மாதத்திற்கான தொகை மட்டும், 3,500 கோடி ரூபாய் பாக்கி உள்ளது.ஏற்கனவே, கடந்த, 10 மாதங்களுக்கான கொள்முதல் விலையையும் வழங்கவில்லை. இந்நிலையில், மத்திய அரசு நேரடியாக, காற்றாலை உற்பத்தியாளர்களுக்கு, கொள்முதல் தொகையை அளிக்கும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இதன் நடைமுறையை, உடனே வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பன்னாட்டு நிறுவனங்கள்...
தமிழகத்தில் தற்போது நிலவும், கடும் மின்வெட்டை சமாளிக்கும் வகையில், வீடுகள், மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், ஓட்டல்கள் போன்றவற்றில், காற்றாலை மற்றும் சோலார் மின் உற்பத்தி குறித்து விரிவான ஆய்வுகள் நடத்தப்பட்டன.வர்த்தக பயன்பாட்டுக்கு காற்றாலைகளை நிறுவி தரும் பன்னாட்டு நிறுவனங்களான, கமேசா, ஜெக்டோ எனர்ஜி போன்ற நிறுவனங்கள், வீட்டு உபயோகத்துக்கான, காற்றாலைகளை நிறுவ முன்வந்துள்ளன.கமேசா நிறுவனம், 2.75 லட்சம் ரூபாயில், சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்தியை வீடுகளில் நிறுவ முடியும் என அறிவித்துள்ளது.ஜெக்டோ எனர்ஜி நிறுவனம், புதிய தொழில்நுட்பங்களுடன், காற்றாலை மற்றும் சோலார் மின் உற்பத்தியை நிறுவ தயாராக இருந்தாலும், வர்த்தக பயன்பாட்டுக்கும் உரியதாக, மின் உற்பத்தி இருக்கும் என தெரிவிக்கிறது.இதன், ஆறு மெகாவாட் திறன் கொண்ட, காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்க, இரண்டு கோடி ரூபாய் செலவாகும் என்கின்றனர்.


காற்றாலை உபகரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவனமான, கே.எஸ்.டி., நிறுவனம்ஆலோசகர் ராஜு கூறியதாவது:
வீடுகளுக்கான சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை 1.75 லட்சம் ரூபாயில்   அமைக்கலாம் 
வீடுகளுக்கு மரபுசாரா மின் உற்பத்தியை அமைக்கும் போது, சோலார் மற்றும் காற்றாலை ஆகியஇரண்டையும் சேர்த்து அமைப்பதே சிறந்தது. ஒரு கே.வி., மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் போது, 500 வாட்ஸ் சோலார் நிலையத்தையும், 500 வாட்ஸ் காற்றாலை நிலையத்தையும் அமைக்க வேண்டும்.ஒரு கே.வி., மின் உற்பத்தி நிலையம் அமைத்தால், இரண்டு மின் விசிறி, நான்கு டியூப்லைட்டுகளை பயன்படுத்தலாம். மிக்சி, கிரைண்டர், டிவி, ஏ.சி., போன்றவற்றை பயன்படுத்த, மூன்று கே.வி., வரை மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க வேண்டும். இதற்கு, கூடுதல் செலவாகும்
.சீதோஷ்ண நிலைகேற்ப...
இந்த அமைப்பின் மூலம், பகல் நேரங்களில் சோலார் மின்சாரத்தையும், இரவு நேரங்களில் காற்றாலை மின்சாரத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம். சீதோஷண நிலை மாற்றங்களுக்கு ஏற்ப, இரண்டில் ஒன்றின் மின்சாரத்தை, 24 மணி நேரமும் பெறலாம்.குறைவான, மிதமான,அதிக காற்று வீசும் பகுதிகளுக்கு ஏற்ப, காற்றாலை மின் உற்பத்தியை நிறுவ, ஏதுவான வடிவங்களில், காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களை அமைக்கலாம். நீண்ட கால பயன்பாடு என்ற முறையில், சோலார் மற்றும் காற்றாலைகளில்முதலீடு செய்ய வேண்டும்.

நீண்ட கால முதலீடு..தற்போது செய்யும் முதலீடு, அடுத்த 25 ஆண்டுகள் வரை, பயன் தரும். முதல், 10 ஆண்டுகளில், முதலீடு செய்த தொகைக்கு மின்சாரத்தை பயன்படுத்தி கொள்ளலாம். அடுத்த, 15 ஆண்டுகள் லாப பருவமாக இருக்கும்.அடுத்த, 25 ஆண்டுகளில், மின்வாரியத்தின் கட்டணம் பல மடங்கு உயரும். டீசல் மின் உற்பத்தி, யூனிட்டுக்கு, 50 ரூபாய் வரை இருக்கும். ஆனால், காற்றாலை மற்றும் சோலார் மூலம்உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் விலை யூனிட்டுக்கு ஐந்து ரூபாயை தாண்டாது.எனவே, நீண்ட கால முதலீடாக இவற்றில் முதலீடு செய்ய வேண்டும். மேலும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத மின் உற்பத்தி என்பதும் முக்கியமான ஒன்று. இவ்வாறு ராஜு கூறினார்.
அரசு மானியம் 50%...
சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்திக்காக, மொத்த செலவில் 30 சதவீத தொகையை, மத்திய அரசு அளிக்கிறது. தமிழக அரசும் மானியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.        குறைதபட்சம் 20சதவீத தொகையைஅளிக்கும் என எதிர்பார்க்கலாம்..
 அரசின் மானியம் பெறுவதற்கு, காற்றாலை மற்றும் சோலார் மின் உற்பத்திக்கான உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனம், பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.உபகரணங்களுக்கு, அரசின் பயன்பாட்டுச் சான்றும் பெற்றிக்க வேண்டும். பதிவு செய்யாத, சான்றிதழ் பெறாத நிறுவனங்கள் அமைக்கும் நிலையங்களுக்கு அரசு மானியம் பெற முடியாது.பதிவு பெற்று, சான்றிதழ் பெற்ற நிறுவனங்களின் உபகரணங்களை பயன்படுத்தினால் மட்டுமே, அரசின் மானியம் கிடைக்கும். ஆகவே நாம் 50% மாத்திரமே செலவு செய்தால் போதும்.நமக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.


தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment