Friday 13 January 2012

'பேக்கு வர்மம்' பற்றி தெரியுமா ?


 


'வர்மம்' என்பது தற்காப்பு மற்றும் மருத்துவ முறைக்கு பயனாகும் ஒரு கலையாகும். வர்மத்தில் படு வர்மம், தொடு வர்மம், நோக்கு வர்மம் என பலவகை உண்டு.


'தொடு வர்மம்' மூலம் பல கடுமையான உடல் வலிகள் குணமாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் தாக்க வரும் எதிரியின் சில முக்கிய நரம்பு முனை பகுதியை கையால் அழுத்திக் குத்தி பிரள வைப்பதன் மூலம் ரத்த ஓட்டத்தை தடுத்து அவனை செயலிழக்கச் செய்ய முடியும். உடனே முடக்க முடியும்.

'நோக்கு வர்மம்' பற்றி 7-ஆம் அறிவு திரைப்படத்தில் இயக்குனர்  முருகதாஸ் சொல்ல நாம் அனைவரும் தெரிந்து கொண்டோம். இதற்கு முன் 'படு வர்மம்' பற்றி 'இந்தியன்' திரைப்படத்தில். 7-ஆம் அறிவில் முருகதாஸ்  'அறி துயில் நிலையை' (ஹிப்னாடிசம்) நோக்கு வர்மம் என்கிறார். அதே நேரத்தில் போதி தருமர் வாழ்க்கை வரலாறை புரட்டிப் பார்த்தால் அது முருகதாஸ் சொல்வது போல் இல்லை. அந்த முரண்பாடுகள் இந்தக் கட்டுரைக்கு வேண்டாம்.

வர்மக் கலையின் வாயிலாக நல்லதையும் செய்யலாம் . பொல்லாததையும்  செய்யலாம். நல்லது செய்யும் வர்மக் கலையின் மீது என்றும் எனக்கு மரியாதை உண்டு.

Anyway, தலைப்புக்கு வருகின்றேன்..

சில காலங்களுக்கு முன் ஒரு குடும்பத்தினரைப் பற்றி ஒருவர் சொல்லக் கேட்டு அறிந்தேன்.

அந்தக் குடும்பத்தின் உறுப்பினர்களுக்கு ஒருவர் நிறைய நல்லன செய்து, உளப்பூர்வமாக உதவி செய்கிறார். அவர் நல்ல மனதோடு, வெள்ளிந்தியாக செய்து வந்த பல காரியங்களை அக்குடும்பம் ஏற்று சுபிட்சம் அடைகிறது. ஆனால் அக்குடும்பம் அவரை முடிந்த அளவு பயன்படுத்திக் கொள்கிறது என்பதையோ, காரியங்கள் முடிந்த பிறகு அவர் மீது அபாண்டமாக பழி போட்டு பணம் பறிக்கப் போகிறது என்பதையோ அவரால் அறிந்து கொள்ள முடியவில்லை. அவ்வளவு கமுக்கமாக அக்குடும்பத்தினர் இருந்து காரியங்களை சாதித்துக் கொண்டனர்.

இதற்கு அக்குடும்ப உறுப்பினர் கையில் எடுத்துக் கொண்ட ஆயுதம் எது தெரியுமா?

அது "பேக்கு வர்மம்" 
(குறிப்பு : இது வர்மக்கலையில் சேர்த்தி அல்ல)

அக்கு(டு)ம்ப உறுப்பினர்கள் தங்களை 'பேக்கு' மாதிரி காட்டிக் கொண்டு காரியங்கள் சாதித்துக் கொள்வதில் வல்லவர்கள். 'அப்பாவி என்பது வேறு.. அப்பாவி போல் காட்டிக் கொள்வது' என்பது வேறு. இதில் அக்குடும்பம் இரண்டாவது ரகம். அக்குடும்பத்தினருக்கு உதவிய அந்த நல்லவர் அக்குடும்பத்தில் தங்கி இருக்கும் போது அனைவரும் 'ஒன்றும் தெரியாத அமுக்கு பாப்பாக்கள்' போல நடந்து கொள்வர். மிகப் பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு உதவிகள் கேட்பார். இளகிய மனம் படைத்த அந்த நல்லவர் அவர்கள் கேட்டவாரெல்லாம் செய்து கொடுப்பார், நடந்து கொள்வார். அதனால் அக்குடும்பத்தினர் பெரும் பயன் அடைந்தனர்.

அக்கு(டு)ம்பத் தலைவன் ஒரு 'சைலென்ட் துரை'.  குறிப்பாக தனது மகளிடம் அதிகமாக பேச மாட்டார். இருவரும் கண்களாலே 'சைகை' செய்து கொள்வர். அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். அவை அந்த இருவருக்கு மட்டுமே புரியும். மற்றவர்களுக்கு சட்டென புரியாது. அந்த நல்லவருக்கும் புரியாது போனதில் வியப்பு ஏதும் இல்லை. சுருங்கச் சொன்னால் அவரை தந்தையும் மகளும் சேர்ந்து அந்த நேரத்தில் ஏமாற்றுகிறார்கள் என்று பொருள்.

அக்கு(டு)ம்பத் தலைவியை 'ஒரு அபிநய சரஸ்வதி' எனலாம். சூழலுக்குத் தக்கவாறு முகத்தில் பாவனை காட்டுவார். அவருக்கு பிடிக்கவில்லை என்றால் முகவாய்க் கட்டு இன்னும் கோனையாகிவிடும். பிடித்திருக்கிறது என்றால் உள்ளே கோணல்மாணலாக வளர்ந்திருக்கும் அத்த்தனை பற்களும் தெரிய உதடுகள் காது வரை எட்ட சத்தமில்லாமல் சிரிப்பார். விரும்பாத ஒன்று நடந்து விட்டதாக அவர் எண்ணினால் 'ஸ்...ஸ்ச் ...' என்ற சத்தம் மட்டும் கேட்கும். பல சமயங்களில் ஏறுக்குமாறாகவும் பாவனை காட்டுவார், காரியம் சாதிக்க. பாவம்..... அந்த நல்ல மனிதர் இந்த அபிநய சரஸ்வதியின் முக பாவனைகளால் பல முறை குழம்பி போய் இருக்கிறார்.

அக்கு(டு)ம்ப தலைவரின் மகள், தனக்கு சாதகமான பதிலை சிரித்துக் கொண்டே போட்டு வாங்குவதில் கில்லாடி. அவர் கேட்ட கேள்வி மற்றவர்களுக்கு தெரியாது. ஆனால் அந்த நல்ல மனிதர் சொன்ன பதில் எல்லோருக்கும் தெரியும். குரங்கிடமிருந்து  தொப்பியை திரும்பப் பெற வியாபாரி, முதலில் தனது தொப்பியை தூக்கி எறிவானாம். அதை போல செய்து முதலில் ஒரு ஒத்திகை பார்த்துக் கொள்வார். அவர் ஒத்திகைக்கு செய்ததை அந்த நல்ல மனிதரும் நல்லெண்ணத்தில் செய்தார்.  பின் 'அது தவறு.. நீ ஏமாந்து விட்டாய்' என இன்று அவரை பரிகசிக்கின்றார். அந்த மனிதருடன் சேர்ந்து கமுக்கமாக செய்த பல காரியங்களை இன்று ஒருபுறமாக நின்று 'தவறு' என்று சொல்கிறார். ஆனால் அதெப்படி தவறாகிவிடும்? எனினும் இப்படியே அவரது நுண் உணர்வுகளை தூண்டி, சீண்டி மெல்லமெல்ல அவரை சீரழித்து வந்தார். நேரத்திற்கு தக்க கபட நாடகம் போடுவதில்,  ஆடுவதில்  கில்லாடி. அந்த நல்லவரை எப்படியும் தவறானவராக சித்தரிக்க வேண்டும் என்று பலே திட்டங்கள் எல்லாம் போட்டார்.  எல்லாம் 'பேக்கு வர்ம' மயம்.

அக்கு(டு)ம்ப தலைவனின்  மகன் ஒரு அசகாய பேக்கு (சூரன்). காரியம் ஆக வேண்டும் என்றால் எதையும் செய்வான். மற்றவர்கள் பேசுவதைக் கேட்டு பதில் சொல்ல மாட்டன். 'ஹு..ஹும்.. ஹு..ஹும்..' என்ற ஒரு விசித்திர முனகல் தவிர வேறு எந்த சத்தமும் அவன் வாயில் வராது. அதாவது எதிர் தரப்பினர் பேசுவதை அமோதிப்பதை போல. இப்படி 'ஹு..ஹும்.. ஹு..ஹும்..' என்று சொல்லி பின்னிட்டு தங்கள் 'கை  கழுவும்  திட்டத்தை நிறைவேற்ற' அந்த நல்ல மனிதரிடம்  பல விடயங்களை கறந்து கொண்டான். தேவைக்கு தகுந்தாற் போன்று பல பொருட்களை இரவலாக, பரிசாக பெற்றுக் கொண்டான்.

அக்கு(டு)ம்ப உறுப்பினர் அனைவரும் நடப்பதே ஏதோ பாதம் தரையில் தொட்டும் தொடாமலும் நடப்பது போல இருக்கும். பூனை தோற்று விடும் போங்கள். மெல்ல நடந்து வந்து ஒற்றர் வேலை பார்ப்பதில் வல்லவர்கள். அதே நேரம் திடீரென மாயமாக மறைந்தும் போய் விடுவார்கள். "இங்கேதானே இருந்தார்கள்.. எங்கே போனார்கள்?" என்று நாம் தேடிக் கொண்டிருக்க வேண்டும்.

அந்த மனிதருக்கு வேண்டியவர்களிடம் அவரை அறியாமலேயே பழகி வந்துள்ளனர். தற்போது அவர்களிடம் தங்களை நல்லவர்கள் போல் காட்டிக் கொண்டு, அவரை பற்றி வெகு சாதுரியமாக குறை கூறி துவேசம் விளைவிக்கின்றனர். அவருக்கு வேண்டாதவர்களை இனம் கண்டு அவர்களிடமும் பழகினர். எதிரிக்கு எதிரி நண்பன் அல்லவா?

அந்தக் குடும்பம் இந்த நல்ல மனிதரிடம் காட்டிய பேக்கு வர்மத்தால், இன்று அவர் கிட்டத்தட்ட சிதைந்து போய் விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

நன்றியா ? கிலோ எவ்வளவு? என்று கேட்கிறது அக்குடும்பம்.

அக்குடும்பம் இதுகாறும்  வன்ம உணர்வுடன் பழகி வந்துள்ளது என்பதை அந்த நல்ல மனிதர் அறிந்து கொள்வதற்குள் எல்லாம் கை மீறிப் போய் விட்டது.

இப்படிப்பட்ட 'வர்மக் கலையை' பிரயோகிக்கும் சேறும் சகதியுமான நபர்களை அடையாளம் கண்டு விலகி இருப்பது நல்லது. இல்லாவிட்டால் முடங்கி போவது உறுதி

No comments:

Post a Comment