Monday 16 January 2012

இறைவன் என்னை ஏற்றுக் கொள்வானா? -கருணாநிதி...


புட்டபர்த்தி சாய்பாபா அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். தன்னை ஒரு நாத்திகர் என்று உறுதிபட தெரிவிக்கும் அவரால் கூறப்பட்ட அந்தக் கருத்திலும் ஓர் உறுதியான செய்தி எல்லோருக்கும் இருக்கிறது.

'கடவுளை நான் ஏற்காதவன். நான் கடவுளை ஏற்றுக் கொள்ளாதது முக்கியமில்லை. கடவுள் என்னை ஏற்றுக் கொள்கிறாரா என்பதுதான் முக்கியம். எனது செயல்கள் அதை நிரூபணம் செய்கிற மாதிரி அமைய வேண்டும் என்று கருதுகிறேன்.' என்பதுதான், முதல்வரின் பேச்சில் முக்கியமாக குறிப்பிட வேண்டிய ஒரு சில வரிகள்.

இவை சாதாரண வரிகள் அல்ல. அர்த்தமுள்ள மிக ஆழமான பொருள் பொதிந்துள்ள வரிகளாகும். இதில் ஆத்திகர்கள் நாத்திகர்கள் என்று கூறிக் கொள்ளும் இரு தரப்பினருக்குமே மிக முக்கிய ஒரு செய்தியிருக்கிறது.

ஆத்திகர்கள் கடவுளை ஏற்றுக் கொண்டவர்கள். சரிதான். எப்போதாவது நாம் அந்தக் கடவுள் நம்மை ஏற்றுக் கொண்டாரா? அவர் ஏற்றுக் கொள்ளும் வகையில் நம் செயல்கள் அமைந்துள்ளதா? என்று ஆத்திகர்களதகிய நாம் என்றாவது சிந்தித்திருக்கிறோமா?

இன்று உலகில் மதத்தின் பெயரால் கடவுளின் பெயரால் சிந்தப்பட்ட ரத்தங்கள் கோடிகளைத் தாண்டும். ஏன் இப்படி? எந்த மதமாவது அல்லது மார்க்கமாவது மனித உயிர்களை கொல்லச் சொல்லி சொல்லியிருக்கிறதா என்றால் 'இல்லை' என்ற பதிலே அனைவரிடத்திலிருந்தும் வரும்.

ஒரு மனிதனுக்கு தீங்கு செய்தால் பாதிப்படைந்த அந்த மனிதன் மன்னிக்காத வரை இறைவனும் மன்னிக்க மாட்டான் என்று இஸ்லாம் கூறுகிறது. 'ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்' என்று எல்லா மதங்களும் போதித்திருக்க எங்கிருந்து வந்தது இந்த சண்டைகளும் சச்சரவுகளும்.?

ஷியா சன்னி சண்டைகள், சைவ சமண சண்டைகள், சைவ பௌத்த சண்டைகள், இஸ்லாம் கிறித்தவ சண்டைகள், இந்து இஸ்லாமிய சண்டைகள் என்று எங்கு பார்த்தாலும் மதத்தின் பெயராலேயே உலகெங்கும் உயிர்க் கொலைகள் நடப்பதைப் பார்க்கிறோம். இது போன்ற கொலைகளை செய்து விட்டு பழியை கடவுளிடம் போடுவது விந்தையாக இருக்கிறது அல்லவா?

நாத்திகர்களை விட ஆத்திகர்களிடம் தவறுகள் அதிகம் உள்ளதைப் பார்க்கிறோம். இதற்கு காரணம் ஆத்திகத்தை இவர்கள் முறையாக அணுகாததே காரணம். ஏதோ ஒரு சில சடங்குகளை செய்தவுடன் நம் கடமை முடிந்தது என்ற நிலையில்தான் பெரும்பாலோர் இருக்கிறோம். தொழுக வேண்டுமா? தொழுது கொள்கிறேன். கோவிலுக்கும் சர்ச்சுக்கும் போக வேண்டுமா? போகிறேன். ஆனால் என் அன்றாட வாழ்வில் மதமோ மார்க்கங்களோ குறிக்கிடக் கூடாது என்று நினைப்பவர்களாக இருக்கிறோம். இங்குதான் பிரச்னையே ஆரம்பமாகிறது.

உதாரணத்திற்கு இஸ்லாத்தை எடுத்துக் கொண்டால் ஒரு மனிதன் காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை அவன் செய்யும் அனைத்து செயல்களிலும் இஸ்லாம் குறிக்கிடுகிறது. திருமணம், தொழில், வணக்கம், உறவு முறை என்று எந்தத் துறையையும் இஸ்லாம் விடவில்லை.

'உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று'
-குர்ஆன் 2 : 177

வெறும் சடங்குகள் மட்டுமே ஒருவனை சொர்க்கத்தில் சேர்க்காது என்பதை இதிலிருந்து அறிகிறோம். இதை எல்லாம் விளங்காது அநியாயத்துக்கு துணை போகும் ஆத்திகர்கள் தங்களைத் தாங்களே எமாற்றிக் கொள்பவர்களாகவே இருக்கின்றனர். தாங்கள் சார்ந்திருக்கும் மதத்துக்கும் மார்க்கத்துக்கும் அவப்பெயரையும் உண்டாக்கி விடுகின்றனர்.

'நம்பிக்கை கொண்டோரே! இறைவனுக்குக் கட்டுப்பட்டு நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள். ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கன் நீதியாக நடக்காமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள். அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள். நீங்கள் செய்வதை இறைவன் நன்கறிந்தவன்.'
-குர்ஆன் 5 : 8

குர்ஆனின் இந்த வசனத்தை சரிவர ஆராய்ந்தால் நம்மிடையே நடக்கும் பல வன்முறைகளை இல்லாது செய்து விடலாம். தன் மதத்தை சார்ந்தவன் ஒரு தவறு செய்தால் அதைத் தட்டிக் கேட்காமல் அவனுக்கு ஆதரவாக கூட்டம் சேர்ப்பதாலேயே பல கலவரங்கள் ஆங்காங்கே வெடிக்கின்றன.

அதே போல் நாத்திகர்களை எடுத்துக் கொள்வோம். ஒரு இரு சக்கர வாகனத்தைக் காட்டி நான் ஒருவரிடம் 'இது புகை வண்டி' என்று சொன்னால் உடனே மறுத்து விடுவார். ஏனெனில் இரண்டு வாகனத்தையும் அவர் பார்த்துள்ளார். இது போல் ஒரு பொருள் இருந்தால்தானே அந்த பொருள் இது இல்லை என்று வாதிட முடியும்? இறைவன் என்ற ஒரு வல்லமை உலகில் இருப்பதால்தான் 'அந்த வல்லமை நீங்கள் நினைப்பது இல்லை' என்று நாத்திகர்களால் வாதிட முடிகிறது. எனவே அவர்களும் ஒரு வகையில் இறைவனை மறை முகமாக ஒத்துக் கொள்ளக் கூடியவர்களாகவே இருக்கின்றனர்.

எனவே முடிந்தவரை சமூகத்துக்கு நன்மைகளை செய்து அந்த இறைவன் ஏற்றுக் கொள்ளக் கூடிய மக்களாக மாற வேண்டும் என உங்களையும் என்னையும் கேட்டுக் கொள்கிறேன்.

'தர்மம், நன்மையான காரியம், மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துதல் ஆகியவற்றை ஏவியதைத் தவிர அவர்களின் பெரும்பாலான பேச்சுக்களில் எந்த நன்மையும் இல்லை. இறைவனின் திருப்தியை நாடி இவற்றைச் செய்பவருக்கு மகத்தான கூலியை வழங்குவோம்.'
-குர்ஆன் 4 : 114

No comments:

Post a Comment